

கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கோவையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை இன்று (நவ.14) நேரில் சந்தித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆறுதல் கூறினர்.
பின்னர், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், நீதி விசாரணை சரியான விதத்தில் நடைபெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம்.
இதற்கு காரணமான ஆசிரியர் மீது, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைதுசெய்துள்ளனர். அந்தப் பள்ளியின் முதல்வரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற நிலை இனி யாருக்கும் வரக்கூடாது என மாணவியின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தரப்படும்.
பெற்றோர், ஆசியர்கள், நண்பர்களிடம் கூற முடியாத விஷயங்கள், குறைகள், பிரச்சினைகளை பள்ளி மாணவர்கள் 14417 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். அவர்களுக்கு உதவ தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு வேலை, இழப்பீடு வேண்டும் என உயிரிழந்த மாணவியின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி எழுதியதாக வெளியான கடிதத்தில் உள்ளது தங்கள் குழந்தையின் கையெழுத்துதான் என பெற்றோர் தெரிவித்தால், அதுகுறித்தும் விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி ஆறுதல்:
மாணவியின் பெற்றோருக்கு எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி இன்று நேரில் ஆறுதல் தெரிவித்தார். அதன்பின்னர் அவர் கூறும்போது, "உயிரிழந்த மாணவியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். மாணவியின் மரணத்துக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் குடும்பத்துக்கு ஒருகோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும்”என்றார். அப்போது, எம்எல்ஏக்கள் அம்மன் கே.அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதிகபட்ச தண்டனை தேவை:
எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "மாணவியின் தற்கொலைக்கு அவர் முன்பு படித்த தனியார் பள்ளி ஆசிரியரின் துன்புறுத்தல் காரணம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பள்ளி முதல்வரிடம் புகார் அளி்த்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்"என்று தெரிவித்துள்ளார்.