Published : 07 Nov 2021 03:06 AM
Last Updated : 07 Nov 2021 03:06 AM
ஆரணியில் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, தமிழக தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் விசாரணை நடத்தி, விளக்கம் அளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி லட்சுமி நகரை சேர்ந்த ஆனந்த்(46), அவரது மனைவி பிரியதர்ஷினி(40), மகன் சரண் (14), மகள் லோஷினி (10) ஆகியோர் கடந்த செப்.8-ம் தேதி ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓட்டலில் பிரியாணி, தந்தூரி உணவு வகைகளை சாப்பிட்டுள்ளனர்.
பின்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிறுமி லோஷினிக்கு பாதிப்பு அதிகமானதால் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், அதே ஓட்டலில் சாப்பிட்ட 24 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறுமி லோஷினி இறந்தது குறித்து ஆரணி வட்டாட்சியர் சுபாஷ் சந்தர், டிஎஸ்பி கோட்டீஸ்வரன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கெட்டுப்போன அசைவ இறைச்சியை சமைத்ததால் உடல் உபாதை ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமையாளர் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டர் முனியாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், தமிழ்நாடு இந்து மக்கள் பாதுகாப்பு படை தலைவருமான டாக்டர் எஸ்.கே.சாமி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதை விசாரணைக்கு ஏற்ற ஆணையம், சிறுமி லோஷினி உயிரிழந்த விவகாரம் குறித்து, தமிழக தலைமைச் செயலர், டிஜிபி விசாரணை நடத்தி, 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT