நீட் தேர்வு தோல்வி பயத்தில் பொள்ளாச்சி அருகே மாணவர் தற்கொலை
நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் பொள்ளாச்சி அருகே மாணவர் விஷம் குடித்து, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெம்பர் 10 முத்தூர் குப்பையன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (54), விவசாயி. இவருடைய மனைவி வளர்மதி (44) இவர்களின் இரு மகன்கள் கீர்த்திவாசன் (21), தினேஷ் (17). இதில் கீர்த்திவாசன் பிளஸ் 2 படிப்பை முடித்துவிட்டு மருத்துவப் படிப்பில் சேர்வதற்காகக் கடந்த 3 முறை நீட் தேர்வை எழுதியுள்ளார்.
மூன்று முறையும் கீர்த்திவாசன் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் 4-வது முறையாகத் தற்போது தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காகக் காத்திருந்துள்ளார். இம்முறை தேர்வில் கேள்விகள் கடினமாக இருந்ததால் தேர்ச்சி பெறுவோமோ, மாட்டோமோ என்ற அச்சம் கீர்த்திவாசனுக்கு ஏற்பட்டது. மேலும், ஏற்கெனவே எழுதிய 3 தேர்வில் தனது விடைத்தாள் மாறிவிட்டதால்தான் தோல்வியடைந்துவிட்டேன் என்றும், தற்போதும் தோல்வியடைந்து விடுவேனோ என பயப்படுவதாகவும் நண்பர்களிடம் கீர்த்திவாசன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கீர்த்திவாசன் இன்று திடீரென்று விஷம் குடித்துள்ளார். பின்னர் வெளியே சென்று இருந்த தனது தாய் வளர்மதியின் செல்போனுக்குத் தொடர்புகொண்டு, தான் விஷம் குடித்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்து வளர்மதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது கீர்த்திவாசன் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார்.
கீர்த்திவாசனை மீட்ட பெற்றோர் அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியிலேயே கீர்த்திவாசன் உயிரிழந்தார். இதுகுறித்துக் கிணத்துக்கடவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
