புதுச்சேரியிலும் ஆதரவற்ற பெண்களுக்கு குடும்ப அட்டை: எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்

புதுச்சேரியிலும் ஆதரவற்ற பெண்களுக்கு குடும்ப அட்டை: எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் ஆதரவற்ற பெண்களுக்கு குடும்ப அட்டை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சிவா எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (அக். 30) வெளியிட்ட அறிக்கை:

"கணவரால் கைவிடப்பட்ட அல்லது மணவாழ்வு முறிவுற்று ஆதரவின்றித் தனியாக வசிக்கும் பெண்களின் பெயர்கள் கணவர் குடும்பத்தின் ரேஷன் கார்டுகளிலேயே இடம் பெற்றுள்ளன.

கணவர் அப்பெண்மணியின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்க முன்வருவதில்லை. நீதிமன்ற விவாகரத்து சான்று போன்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், சம்பந்தப்பட்ட பெண்மணிகளுக்குத் தனியாக ரேஷன் கார்டு வழங்கப்படாத நிலை ஏற்படுகிறது.

இதனால் அப்பெண்களால் தங்களுக்கு அரசு வழங்கும் ரேஷன் பொருட்களைக்கூடப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி அரசின் திட்டங்களைப் பெறுவதற்கும் ரேஷன் கார்டுகள் தேவைப்படுகின்றன. அதற்கும் அப்பெண்ணின் குடும்பத்தினர் ரேஷன் கார்டுகளைத் தர முன்வராததால், அவர்களால் அரசின் திட்டங்களையும் பெற்றுப் பயனடைய முடிவதில்லை.

இதனால் கணவரால் கைவிடப்பட்ட அல்லது ஆதரவின்றித் தனியாக வசிக்கும் பெண்களும் அவர்களைச் சார்ந்து வாழும் குழந்தைகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பும் பாதிக்கப்படுகிறது.

இதுபற்றி அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கணவரால் கைவிடப்பட்ட அல்லது ஆதரவின்றித் தனியாக வசிக்கும் பெண்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் கணவரால் கைவிடப்பட்டு அல்லது மணவாழ்வு முறிவுற்று தனியாக வசித்துவரும் நிலையில், அவரது ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள தரவுகளை வைத்து, சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரைச் சார்ந்துள்ள குழந்தைகள் தனியாக வசித்து வருவது குறித்து முறையாக விசாரித்து, சம்பந்தப்பட்ட அலுவலர் தனது அதிகார வரம்பைப் பயன்படுத்தி குடும்பத் தலைவரின் அனுமதியில்லாமல் சம்மந்தப்பட்ட பெண்ணின் பெயரைக் குடும்ப அட்டையிலிருந்து நீக்கவும், தனியாக வாழும் சம்பந்தப்பட்ட பெண்மணி புதிய குடும்ப அட்டை கோரும்போது சட்டபூர்வமான நீதிமன்ற விவாகரத்துச் சான்று போன்ற ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்க வலியுறுத்தாமல் புதிய குடும்ப அட்டை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதற்கான உத்தரவை புதுச்சேரி அரசு விரைந்து பிறப்பித்து, புதுச்சேரியில் கணவரால் கைவிடப்பட்ட அல்லது ஆதரவின்றித் தனியாக வசிக்கும் பெண்களுக்கு உணவுப் பாதுகாப்பையும், அரசின் திட்டங்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்".

இவ்வாறு சிவா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in