தமிழக ஆளுநர் தனது அதிகார எல்லையை உணர்ந்து செயல்பட வேண்டும்: சு.திருநாவுக்கரசர் எம்.பி.

தமிழக ஆளுநர் தனது அதிகார எல்லையை உணர்ந்து செயல்பட வேண்டும்: சு.திருநாவுக்கரசர் எம்.பி.
Updated on
1 min read

தமிழ்நாட்டின் ஆளுநர் தனது அதிகார எல்லையைத் தாண்டாமல் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்றார் மக்களவை திருச்சி தொகுதி உறுப்பினர் சு.திருநாவுக்கரசர்.

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவரான சு.திருநாவுக்கரசர் தலைமையில் இன்று கலையரங்க மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, சட்டப்பேரவையின் திருச்சி கிழக்குத் தொகுதி உறுப்பினர் எஸ்.இனிகோ இருதயராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் வே.பிச்சை, திருச்சி மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் உட்பட அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் சு.திருநாவுக்கரசர் கூறியது:

திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்துக்குத் தேவையான ராணுவ நிலத்தைப் பெறுவது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இதுவரை 4 முறை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடைமுறை காலதாமதம் நிலவுகிறது. மத்திய அமைச்சரிடமிருந்து விரைவில் உத்தரவு வரும். பணி விரைவில் தொடங்கும்.

ராகுல் காந்திக்கு பிரதமர் மோடியின் பலமும் தெரியும், பலவீனமும் தெரியும். எனவே, அவர் யாரிடமும் சென்று பாடம் படித்து கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. நாடாளுமன்றம் மற்றும் கட்சித் தலைவராக இருந்த அனுபவம் ஆகியவற்றால் மோடியைச் சமாளிக்கக்கூடிய, அவரை வெற்றி பெறக் கூடிய நாட்டில் உள்ள ஒரே அரசியல் தலைவர் ராகுல்காந்தி மட்டும்தான். அதை காலம் விரைவில் நிரூபிக்கும்.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர்களுக்கென்று சில அதிகாரங்களும், சில உத்தரவுகளை செயல்படுத்துவதற்கான உச்ச வரம்பு எல்லையும் உண்டு. அந்த எல்லையை உணர்ந்து, ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படுவது நல்லது. கடந்த காலங்களில் ஆளுநர்கள் அப்படித்தான் செயல்பட்டு வந்தனர்.

ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு வந்த பிறகு பல மாநிலங்களில் ஆளுநர்களைப் பயன்படுத்தி இடையூறு அளித்து வருகிறது. எனவே, தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் தனது அதிகாரத்தின் எல்லைகளை உணர்ந்து அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சி ஆகிய தேர்தல்களைப்போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி சுமூகமாகத் தொடரும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in