

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுக்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணையவழி சுகாதார விழிப்புணர்வுத் தொடர் நிகழ்வை தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (அக்.28) தொடங்கி வைக்கிறார்.
‘சுத்தம் சுகாதாரம்’ இணையவழி சுகாதார விழிப்புணர்வு நிகழ்வு, சென்னை சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையிலுள்ள சென்னை பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு தலைமையேற்று, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (அக்.28) காலை 11 மணிக்கு தொடங்கி வைக்கிறார்
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்முன்னெடுக்கும் இந்த இணையவழி தொடர் நிகழ்வை ‘டெட்டால்பநேகா ஸ்வஸ்த் இந்தியா’, ‘கலெக்ட்டிவ் குட் ஃபவுண்டேஷன்’, ‘அவ்வை வில்லேஜ் வெல்ஃபர் சொஸைட்டி’ ஆகியவை இணைந்து நடத்துகின்றன.
இந்த தொடர் நிகழ்வில் ‘ஆரோக்கியமாக வாழ…’ எனும் நோக்கில், கரோனா போன்ற பெருந்தொற்று பரவல் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு முறைகள், தனிநபர் சுத்தம், கழிப்பறை சுத்தம், சுத்தமான குடிநீர்,சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும், இவற்றைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை அனைவரும் உணரும் வகையிலும் படக்காட்சிகளுடன் கூடிய செயல்பாடுகள் மாணவ-மாணவிகள் மனதில் பதியுமாறு விளக்கப்படவுள்ளன.
மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் பார்த்து பயன்பெறும் வகையில் வரும் நவம்பர் தொடங்கி, அடுத்த ஆண்டு பிப்ரவரிவரை இணையவழியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிகழ்வை https://www.htamil.org/00091, https://www.htamil.org/00092 ஆகிய யூ-டியூப் லிங்க்-களில் நேரலையில் காணலாம்.