

எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டுசெல்ல கன்வேயர் அமைக்கும் பணியின்போது, கொற்றலை ஆற்றின் நீர்வழிப் பாதையில் கொட்டப்பட்ட கட்டுமானப் பொருட்கள் முழுவதையும் அப்புறப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டுசெல்லும் கன்வேயர் திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சட்டப்படி அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகிச் செல்வதோடு, சுற்றுச்சூழல் அனுமதியையும் மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி என்ற மீனவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
கொற்றலை ஆற்றைக் கடந்து செல்லும் வகையில் வழித்தடம் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆற்றின் உள்ளேயே தளம் அமைத்து கன்வேயர் பெல்ட்டைக் கொண்டுசெல்லும் வகையில், கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீர்வழிப் பாதையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை அகற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (அக். 23) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீர்வழிப் பாதையில் கொட்டப்பட்ட 80 சதவீதக் கட்டுமான இடிபாடுகள், கட்டுமானப் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நீர்வழிப் பாதையில் கிடக்கும் கட்டுமான இடிபாடுகள், கட்டுமானப் பொருட்கள் அத்தனையையும் அப்புறப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவரோ அல்லது முதன்மைச் செயல் அதிகாரியோ அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 12-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.