

`தீப்பெட்டிக்கான விலையை ரூ.1 உயர்த்துவது’ என, உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தீப்பெட்டி விற்பனை விலை 2007-ம் ஆண்டுதொடங்கி மாற்றமில்லாமல் ரூ.1 என்ற நிலையிலேயே விற்பனையாகி வந்தது. தற்போது, மூலப்பொருட்களின் விலை, மின்சாரக் கட்டணம், லாரி வாடகை ஆகியவை உயர்வால், தீப்பெட்டி விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரினர்.இதன்படி, அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சிவகாசியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், டிசம்பர் 1-ம் தேதி முதல் 50குச்சிகள் கொண்ட தீப்பெட்டியை ரூ.2-க்கு விற்பனைசெய்ய முடிவு எடுக்கப்பட்டது.
நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் வி.எஸ்.சேதுரத்தினம் கூறும்போது, ``கடந்த 1995-ம் ஆண்டு 50 பைசாவாகவும், 2007-ம்ஆண்டு ரூ.1 எனவும் தீப்பெட்டி விலை நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர் விலை உயர்த்தப்படவில்லை. அக்.10-ம் தேதிக்குப் பின்னர், பொட்டாசியம் குளோரேட் ரூ.63-ல் இருந்து ரூ.78, சல்பர் ரூ.24-ல் இருந்து ரூ.31, மெழுகு ரூ.58-ல் இருந்து ரூ.80, சிவப்பு பாஸ்பரஸ் ரூ.425-ல் இருந்து ரூ.810 என மூலப்பொருட்கள் கடுமையான விலை ஏற்றத்தை சந்தித்துள்ளன. எனவே, 50 குச்சிகள் கொண்ட தீப்பெட்டி ரூ.2-க்கு விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார் அவர்.