Published : 21 Oct 2021 03:06 AM
Last Updated : 21 Oct 2021 03:06 AM

இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் உயிரிழப்பு: மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினர் ரோந்துக் கப்பல் மோதி மீனவர் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து அக்.18-ம்தேதி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ் மகன் ராஜ் கிரண்(30), சுதாகர் மகன் சுகந்தன்(30) அருளானந்தன் மகன் சேவியர்(32) ஆகியோர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினத்திலிருந்து 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பல் மூலம் இடித்ததில் மீனவர்களின் படகு கவிழ்ந்தது.

இதனால், கடலில் விழுந்து தத்தளித்த மீனவர்களில் சுகந்தன், சேவியர் ஆகியோரை இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு மீட்டு சென்றனர். நீண்ட நேரமாகியும் ராஜ்கிரணை கண்டுபிடிக்க முடியாததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியானது.

இந்நிலையில், இலங்கை கடற்படையினர் நேற்று மேற்கொண்ட மீட்பு பணியின்போது, ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்.

அதன்பின், அவரது சடலம் காங்கேசன் துறை கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, உடல் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் போராட்டம்

இந்நிலையில், இலங்கை கடற்படையைக் கண்டித்து கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மீன்பிடி இறங்கு தளத்தில் சுமார் 280 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மீனவர்கள் கூறியபோது, “இலங்கை கடற்படையானது தமிழக மீனவர்களை தாக்கி, கைது செய்வதுடன், படகு, வலைகளை சேதப்படுத்தியும் வருகிறது. மேலும், மீனவர்களை கொலை செய்வது வேதனை அளிக்கிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை எங்களின் போராட்டம் தொடரும். பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்’’ என்றனர்.

தகவல் இல்லை: மீன்வளத் துறை

இதுகுறித்து மீன்வளத் துறை அலுவலர்கள் கூறியதாவது: முதலில் ராஜ்கிரண் இறந்துவிட்டதாகவும், உடல் மீட்கப்பட்டுவிட்டதாகவும் இந்திய தூதரகம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.

பின்னர், அந்த தகவல் திரும்பபெறப்பட்டது. அதன்பிறகு, இன்று பிற்பகல்(நேற்று) வரை அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும்வரவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x