அசைவ, மதுப் பிரியர்களுக்காக சனிக்கிழமையில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அசைவ, மதுப் பிரியர்களுக்காக சனிக்கிழமையில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Updated on
1 min read

ஞாயிற்றுக்கிழமைகளில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளக் கூடாது என்கிற தவறான தகவலின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை அவர்கள் தவிர்ப்பதாகவும் அதனால் இந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று (18-10-2021) சென்னை பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

’’சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. காரணம் பண்டிகை நாட்களாக இருந்ததாலும், தொடர்ந்து மருத்துவ அலுவலர்களால் தடுப்பூசிப் பணிகள் நடைபெற்று வந்ததாலும், விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த மாதத் தொகுப்பிற்குத் தேவையான தடுப்பூசிகள் மத்திய அரசிடமிருந்து வரத் தொடங்கியுள்ளன. தமிழகம் தடுப்பூசி செலுத்துவதைப் பாராட்டி தடுப்பூசிகளை விரைந்து வழங்கி வருகின்றனர்.

நியூசிலாந்தில் ஒரே நாளில் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வெளிவந்திருந்தது. ஆனால், தமிழகத்தில் ஒரே நாளில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசிகள் முகாம்களில் போடப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற மருத்துவ முகாம்களை விட கூடுதலான மருத்துவ முகாம்கள் (50 ஆயிரம் முகாம்கள்) மூலம் மெகா தடுப்பூசி முகாமில் அனைவரும் பயன் அடையும் விதமாகத் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் கடந்த வாரங்களைப் போல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறாமல், வரும் சனிக்கிழமை (அக்.23) அன்று நடத்தப்படும்.

ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் மது அருந்துபவர்களும், மாமிசம் சாப்பிடுபவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளக் கூடாது என்கிற தவறான தகவலின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்கின்றனர். அவர்களுக்காகவும் இந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அனைவரும் பங்கேற்றுப் பயன் அடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in