

கடன் தவணை நிலுவைக்காக தஞ்சை விவசாயி பாலனை தாக்கியது தொடர்பாக மூன்று காவலர்கள் தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள சோழகன்குடிகாடு கிராமத்தின் விவசாயி கோ.பாலன். கடன் தவணை நிலுவைக்காக போலீஸாரும், தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்களும் இவரை தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகின. இது தொடர்பாக 3 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணை மேற்கொண்ட மத்திய மண்டல ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் மூன்று காவலர்களையும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர்கள் மூவரும், தற்காலிகமாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
முழுமையான விசாரணைக்குப் பின்னர் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
நடந்தது என்ன?
கடந்த 4-ம் தேதி காலையில், தனது வயலில் அறுவடை செய்த நெற்கட்டுகளை டிராக்டரில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற விவசாயி பாலனை, கடன் தவணை நிலுவைக்காக போலீஸாரும், தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்களும் டிராக்டரில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கி, அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், தனது செல்போனில் எடுத்த வீடியோ பதிவு, வாட்ஸ் அப் மூலமாக வெளியே வெளியானது.
காவல்துறை மற்றும் நிதி நிறுவனத்தின் இந்த செயலுக்கு தகுந்த நடவடிக்கை கோரி பல்வேறு அரசியல் தலைவர்களும், விவசாயிகள் சங்கத்தினரும் வலியுறுத்திய நிலையில் 3 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.