பேத்தமங்கலா, ராமசாகர் அணை நிரம்பியதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: வேலூரில் தென்மேற்கு பருவமழை 60% அதிகரிப்பு

பேத்தமங்கலா, ராமசாகர் அணை நிரம்பியதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: வேலூரில் தென்மேற்கு பருவமழை 60% அதிகரிப்பு
Updated on
1 min read

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பேத்தமங்கலா, ராமசாகர் அணை முழுமையாக நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டோடி வருகிறது. பாலாற்றில் வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழக-ஆந்திர எல்லையொட்டிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. பாலாற்றின் துணை ஆறுகளான மண்ணாறு, மலட்டாறு, கவுன்டன்யா ஆறு, அகரம் ஆறு, பொன்னை ஆறுகளில் ஒரே நேரத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் சுமார் 14 அடி உயரம் கொண்ட புல்லூர் தடுப்பணையை விட சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டு பகுதியில் இன்று (அக்.16) மாலை நிலவரப்படி சுமார் 7,500 கன அடிக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பாலாற்றில் இருந்து பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஏரிகளில் 40 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளன. 30 ஏரிகளில் 75% நிரம்பியுள்ளன. மாவட்டத்தின் பெரிய ஏரியான வேலூர் சதுப்பேரி ஏரி அடுத்த 4 நாட்களில் முழு கொள்ளளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 379 ஏரிகளில் 81 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. 28 ஏரிகளில் 75%, 44 ஏரிகளில் 50%, 72 ஏரிகளில் 25%, 145 ஏரிகளில் 25% அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளன.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள பேத்தமங்கலா அணை கடந்த வாரம் முழு கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் ராமசாகர் அணைக்கு செல்கிறது. தற்போது ராமசாகர் அணையும் நிரம்பிய தகவலால் அடுத்த 42 கி.மீ தொலைவு பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள 24 தடுப்பணைகளும் நிரம்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வரும் நாட்களில் பாலாற்றில் வெள்ளத்தின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 10 நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழையால் கடந்த மாதம் நிலவரப்படி வேலூர் மாவட்டத்தில் 50% அளவுக்கு அதிகமாக மழை பெய்துள்ளது. அது தற்போதைய நிலவரப்படி 10% அதிகரித்து 60% ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கினால் நமக்கு இன்னும் அதிக மழை கிடைக்க வாய்ப்புள்ளது’’ என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in