விஜயதசமி அன்று கோயில்களைத் திறக்க உத்தரவிடக் கோரி அவசர வழக்கு: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி நாளன்று கோயில்களைத் திறக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குக்கான மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஆர்.பொன்னுசாமி என்பவர் இன்று (அக். 11) சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து அமல்படுத்தும் வகையில், ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்கள் மூடியிருக்க வேண்டுமெனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் வருவதால், அன்றைய தினம் கோயில்களைத் திறக்க அனுமதிக்க வேண்டுமெனக் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை அனுமதிக்கும் அரசு, நவராத்திரி நாட்களின் முக்கியத்துவத்தைக் கருதி துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல், கோயிலைத் திறக்காமல் பிடிவாதமாக இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வழிபாட்டு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தரிசனத்துக்காகக் கோயில்களைத் திறக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு, நாளை (அக். 12) நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in