

திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 14 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு இன்று நடைபெறும் தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 37.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
திருச்சி மாவட்டத்தில் 19 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்கள் மற்றும் 2 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்கள் என மொத்தம் 24 பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெறவிருந்தது.
இதனிடையே, 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதால், எஞ்சிய மொத்தமுள்ள 14 பதவியிடங்களுக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன்படி, வையம்பட்டி ஒன்றியம் 6-வது வார்டு (4656 வாக்காளர்கள்), மருங்காபுரி ஒன்றியம் 10-வது வார்டு (5889), துறையூர் ஒன்றியம் 13-வது வார்டு (4867) ஆகிய உறுப்பினர் பதவியிடங்கள் மற்றும் சிறுமருதூர் (1150), கீழரசூர் (2029) ஆகிய ஊராட்சித் தலைவர் பதவியிடங்கள் மற்றும் போசம்பட்டி 7-வது வார்டு (492), பழங்கனாங்குடி 9-வது வார்டு (393), கீழக்குறிச்சி 10-வது வார்டு (716), கொணலை 8-வது வார்டு (296), ஓமாந்தூர் 1-வது வார்டு (306), பைத்தம்பாறை 4-வது வார்டு (213), ஸ்ரீராமசமுத்திரம் 5-வது வார்டு (315), சேனப்பநல்லூர் 2-வது வார்டு (268), ஆங்கியம் 6-வது வார்டு (166) ஆகிய உறுப்பினர் பதவியிடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த 14 பதவியிடங்களுக்கு ஆண்கள் 10,691 பேர், பெண்கள் 16,057 பேர் என மொத்தம் 26,748 பேர் வாக்காளர்கள் உள்ளனர்.
இதில், இன்று காலை 11 மணி நிலவரப்படி ஆண்கள் 4,016 பேர் (37.56% ), பெண்கள் 4,113 பேர் (37.20%) என மொத்தம் 8,129 பேர் வாக்களித்துள்ளனர். இது 37.38 சதவீதம் ஆகும்.