நடிகர் சூரி சகோதரர் இல்ல விழாவில் திருடியவருக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சூரி சகோதரர் இல்ல விழாவில் திருடியவருக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Published on

நடிகர் சூரி சகோதரர் இல்லத் திருமண விழாவில் நகை திருடிய பரமக்குடி நகைக்கடை உரிமையாளர் விக்னேஷூக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், ராஜாக்கூரைச் சேர்ந்தவர் பிரபல காமெடி நடிகர் சூரி. இவரது சகோதரர் இல்லத் திருமண விழா கடந்த மாதம் 9ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்வின்போது, மணமகள் அறையில் இருந்த 10 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் கீரைத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.

விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த நகைக்கடை நடத்தும் விக்னேஷ் என்பவருக்குத் திருட்டில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் மனுத் தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிபதி புகழேந்திக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, விக்னேஷின் தந்தை, தாத்தா ஆகியோர் இனிமேல் இதுபோன்ற குற்றச் செயல்களில் விக்னேஷ் ஈடுபடமாட்டார் என உறுதிமொழிப் பத்திரம் வழங்கினர்.

இதைத்தொடர்ந்து 60 நாள் வரை காலை, மாலையில் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் விக்னேஷ் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in