Published : 07 Oct 2021 05:04 PM
Last Updated : 07 Oct 2021 05:04 PM

ஆக்சிஜன் உற்பத்தி ஆலை அர்ப்பணிப்பு; எந்த அலை வந்தாலும் சமாளிக்க வசதியாக இருக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: கோப்புப்படம்

சென்னை

ஆக்சிஜன் ஆலைகள் நிறுவுவதன் மூலம் எதிர்காலத்தில் எந்த அலை வந்தாலும், அதைத் தமிழக மருத்துவத்துறை சமாளிப்பதற்கு வசதியாக இருக்கும் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக். 07) சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இரண்டு எண்ணிக்கையில் 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தருமபுரியைச் சேர்ந்த காவலர் வேலுச்சாமி என்பவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்று முகம் மற்றும் தாடை சிதைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 4-9-2021 அன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மற்றும் மருத்துவர்கள் மரு.சி.பிரசாத், எஸ்.பி.சேதுராமன், மரு.என்.ஏ.குணசேகரன் மருத்துவக் குழுவினர் சிறப்பாகச் செயல்பட்டு சிகிச்சை அளித்து, காவலரைக் காப்பாற்றி இன்று மருத்துவமனையில் இருந்து நலம் பெற்று இல்லம் அனுப்பி வைக்கப்படுகிறார்.

வீட்டுக்குச் சென்ற பிறகும், தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்கு மருத்துவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை நானும், மருத்துவத் துறையின் செயலாளர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் அனைவரும் பாராட்டியுள்ளோம். ராஜீவ் காந்தி மருத்துவமனை பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறது.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெரும் பாதிப்பு ஏற்பட்ட நேரத்தில் மாநில அரசு, தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் உதவியோடு ஆக்சிஜன் தேவையில் இன்று தமிழகம் தன்னிறைவு பெற்று விளங்குவதற்கு எல்லோருமே கைகொடுத்தார்கள்.

மத்திய அரசு சார்பில் பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியா முழுவதும் 736 மாவட்டங்களில் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய 1,222 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பிரதமர் கேர் நிதியுதவியின் கீழ் அமைக்கப்படும் ஆலைகள் தமிழகத்தில் 70 இடங்களில் நிறுவப்படுகிறது. அதனை இன்று காலை 11 மணியளவில், மத்திய அரசின் பிரதமர் காணொலி வாயிலாக ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளைப் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கிற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், காணொலி வாயிலாக நானும், மருத்துவத் துறையின் செயலாளர் மற்றும் மருத்துவ உயர் அலுவலர்கள் பங்கேற்றோம். இந்த ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவுவதன் மூலம் விநாடிக்கு 64,900 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. 121.36 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் இதன் மூலம் கிடைக்க இருக்கிறது. 6,490 படுக்கைகளுக்குத் தேவையான ஆக்சிஜனை 10 லிட்டர் விகிதாச்சாரத்தில் கிடைக்க ஏதுவாக இருக்கும். இந்த ஆலைகள் நிறுவுவதன் மூலம் எதிர்காலத்தில் எந்த அலை வந்தாலும், அதைத் தமிழக மருத்துவத்துறை சமாளிப்பதற்கு வசதியாக இருக்கும்.

முதல்வரின் முயற்சியின் காரணமாக, தமிழகத்தில் ஏற்கெனவே 77 ஆக்சிஜன் ஆலைகள் அரசு மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதியின் கீழ் திறக்கப்பட்டு அது பயன்பாட்டில் இருந்து வருகிறது. ரயில்வே வாரிய மருத்துவமனைகளில் நான்கும், என்.எல்.சியில் பத்தும், தமிழகம் முழுவதும் 222 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் இருந்து வருகின்றன.

மேலும், 1 மருத்துவ ஆலையில் 2 தொழில்நுட்ப வல்லுநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் ஆக்சிஜன் தேவையைச் சமாளிப்பதற்குத் தேவையான மனிதத் திறன் என்பது மிகச் சிறப்பாக இருக்கிறது".

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x