

திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவதாகக் கூறி ரூ.10 லட்சம் கேட்டு பெண்ணை மிரட்டிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
மண்ணடியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் அந்தப் பெண்ணை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய நபர் ஒருவர், தனக்கு ரூ.10 லட்சம் தராவிட்டால் திருமணத்தை தடுத்து நிறுத்தி விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாயார், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பெண்ணை மிரட்டியவர் ஒரு பொது தொலைபேசி பூத்தில் இருந்து பேசியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த தொலைபேசி பூத்தின் அருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
இதில் மிரட்டல் விடுத்த நபர் பாரிமுனை, பிடாரியார் கோயில் தெருவைச் சேர்ந்த பாலசாமி (40) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அந்த இளம் பெண்ணுக்கு திருமணம் நடைபெற இருந்ததை கேள்விப்பட்டு, நடத்தை சரியில்லை என மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவித்து விடுவதாக கூறி மிரட்டினால் பணம் கிடைக்கும் என்ற ஆசையில், யாரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக பொது தொலைபேசி பூத்தில் இருந்து பேசி மிரட்டியதாக பாலசாமி தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.