

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாணக்கன்காட்டில் எரிபொருள் பரிசோதனைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றை மூடுவது தொடர்பாக, ஓஎன்ஜிசி அலுவலர்கள் இன்று (அக். 05) ஆய்வு செய்தனர்.
2017-ல் அறிவிக்கப்பட்ட நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து, 200 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்த திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், போராட்டத்தின்போது இம்மாவட்டத்தில் எரிபொருள் பரிசோதனைக்காக 7 இடங்களில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடி, கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களை உரிய விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. அதோடு, கிராம சபைக் கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, பல்வேறு கட்டங்களாக ஆழ்துளைக் கிணறுகளை மூடித் தருவதாக, அப்போதைய ஆட்சியர் எஸ்.கணேஷ் உறுதி அளித்து இருந்தார். எனினும், 4 ஆண்டுகளாகியும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இந்நிலையில், கறம்பக்குடி அருகே வாணக்கன்காட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றை அகற்றி, விளைநிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்காக, ஓஎன்ஜிசி பொது மேலாளர் சந்தானகுமார், மண்ணியல் வல்லுநர் அருண்குமார், முதுநிலைப் பொறியாளர் ராதாகிருஷ்ணன், முதுநிலைத் தொழில்நுட்ப வல்லுநர் அழகு மணவாளன், வட்டாட்சியர் சந்திரசேகர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். கையகப்படுத்தப்பட்ட சுமார் 4.5 ஏக்கர் நிலத்தில் ஆக்கிரமிப்பு ஏதும் இருக்கிறதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.