பன்றியை வேட்டையாட அமைத்த மின் வேலியில் சிக்கி தம்பதி உயிரிழப்பு

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தம்பதி | கோப்புப் படம்.
மின்வேலியில் சிக்கி உயிரிழந்த தம்பதி | கோப்புப் படம்.
Updated on
1 min read

காட்பாடி அருகே பன்றியை வேட்டையாட, சட்டத்துக்குப் புறம்பாக மின்சாரத்தைத் திருடி அமைத்த மின்வேலியில் தம்பதியர் மற்றும் பசுமாடு சிக்கி உயிரிழந்தனர். இந்த வழக்கில், இளைஞரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்துள்ள உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி அஸ்வினி (26). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் நேற்று மாலை (அக். 04) மேய்ச்சலுக்குச் சென்ற பசு மாட்டைத் தேடிக்கொண்டு தங்களது நிலத்துக்குச் சென்றனர். இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், உறவினர்கள் சிலர் இருவரையும் இன்று (அக். 05) காலை தேடிச் சென்றனர். அப்போது, விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான எலுமிச்சை தோட்டத்தில், கணவன் - மனைவி இருவரும் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்ததைப் பார்த்துள்ளனர். அருகில், பசுவும் இறந்து கிடந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், திருவலம் காவல்துறையினர் விரைந்து சென்று இருவரின் உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இருவரும் பன்றியை வேட்டையாட அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, காட்பாடியைச் சேர்ந்த நிலத்தின் உரிமையாளரான விஜயகுமாரைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் நிலத்துக்கு வந்து ஒரு வாரம் ஆனது தெரியவந்தது.

தொடர் விசாரணையில் உள்ளி புதூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (23) என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் பன்றியை வேட்டையாடுவதற்காக விஜயகுமாரின் நிலத்தின் வழியாகச் செல்லும் மின்கம்பத்தில் இருந்து கொக்கி மூலம் மின்சாரத்தைத் திருடி மின்வேலி அமைத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கார்த்திக்கைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in