சிதம்பரத்தில் காந்தி சிலையிடம் மனு அளித்த ஓய்வூதியர் நலச்சங்கக் கூட்டமைப்பினர்

காந்தி சிலையிடம் மனு அளித்த ஓய்வூதியர் நலச்சங்கக் கூட்டமைப்பினர்.
காந்தி சிலையிடம் மனு அளித்த ஓய்வூதியர் நலச்சங்கக் கூட்டமைப்பினர்.
Updated on
1 min read

சிதம்பரத்தில் காந்தி சிலையிடம் ஓய்வூதியர் நலச்சங்க கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை உள்ளது. இன்று (அக். 02) காந்தி ஜெயந்தியையொட்டி, பல்வேறு அரசியல் கட்சியினர், காந்தி மன்றத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில், தமிழ்நாடு இபிஎஸ் ஓய்வூதிய நலச்சங்க கூட்டமைப்பை சேர்ந்த கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர், காந்தி சிலை பாதத்தில் ஒரு மனுவை வைத்தனர். அந்த மனுவில், "வறுமையில் வாடி வருகிறோம். தமிழ்நாடு இபிஎஸ் - 95 ஒய்வூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்தபட்சம் மாதம் ரூ. 9,000 வழங்க வேண்டும்.

ஆண்டுதோறும் பஞ்சப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தப்பட்ட ஆண்டு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்" ஆகிய கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டு இருந்தது.

இது குறித்து, வேணுகோபால் கூறுகையில், "எங்களுக்கு சரியான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை அரசுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. நாங்கள் மிகவும் சிரமத்துடன் வறுமையில் வாழ்ந்து வருகிறோம். காந்தி ஜெயந்தியன்று அவரது சிலையின் பாதத்தில் எங்களது கோரிக்கையை மனுவாக வைத்துள்ளோம். அரசு உரிய நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சரியான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும். அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லவே இதுபோன்று செய்தோம்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in