

காந்தி காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காந்தியின் 153-வது பிறந்த நாள் இன்று (அக். 02) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வின் போது, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை திமுக உருப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் காந்திய இசை பாடல் நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநரும் முதல்வரும் கலந்து கொண்டனர்.
காந்தி பிறந்த நாள் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "அகிம்சை - சகோதரத்துவம் என மானுட சமுதாயத்துக்கு இன்றியமையாத பண்புகளை வாழ்வின் நெறியாகக் கொண்டு வாழ்ந்து நமக்குக் கற்பித்த மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்! தேசத் தந்தை காட்டிய நல்வழியில் நாமும் நாடும் நடைபோடுவதே இன்றைக்கும் என்றைக்கும் தேவையாகும்! சகோதரத்துவத்தை வளர்ப்போம்!" என பதிவிட்டுள்ளார்.