கோடநாடு வழக்கு; சயான், வாளையாறு மனோஜ் ஆஜர்: விசாரணை 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சயான் மற்றும் மனோஜ்.
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சயான் மற்றும் மனோஜ்.
Updated on
1 min read

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணைக்கு சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆஜராகினர். வழக்கு விசாரணை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கேரளாவில் கரோனா அதிகரித்துள்ளதால், குற்றம் சாட்டப்பட்ட பிறர் ஆஜராகவில்லை.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017 ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது.

இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக, சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக, சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜுக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்த ப்பட்டது.

இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (அக். 01) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு சயான் மற்றும் வாளையாறு மனோஜ் ஆஜராகியிருந்தனர்.

அரசு தரப்பில் சிறப்பு வழக்கிறஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆஜராகினர். விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் மேல் விசாரணைக்கு நீண்ட அவகாசம் தேவை என வலியுறுத்தினார்.

அதன் பேரில், நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாணையை அக்டோபர் மாதம் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறும் போது, "போலீஸார் புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். 34 நபர்களிடம் நடத்தப்பட்டது. இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அடிப்படையில் ஆதாரங்கள், மின்னனு ஆதாரங்கள் சேகரித்து வருகிறோம்.

தற்போது வரை நடந்த விசாரணை குறித்த சீல் வைக்கப்பட்ட கோப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு கால அவகாசம் தேவை என கோரினோம். நீதிபதி விசாரணையை 29-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in