

அரசியல் கட்சியினர் யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், புதுச்சேரியில் போட்டியின்றி எம்.பி.யாக பாஜகவைச் சேர்ந்த செல்வகணபதி அறிவிக்கப்பட்டார். அவருக்கான சான்றிதழ் இன்று மாலை தரப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி.யான கோகுலகிருஷ்ணனின் பதவிக் காலம் வரும் அக்டோபர் 6-ம் தேதி முடிவடைகிறது. புதிய எம்.பி.யைத் தேர்வு செய்ய வரும் அக்டோபர் 4-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி கடந்த 22-ம் தேதி முடிவடைந்தது. ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையில் மாநிலங்களவை எம்.பி. பதவியைப் பெறுவதில் போட்டி நிலவியது. பாஜக தலைமை நேரடியாக முதல்வர் ரங்கசாமியிடம் பேசியதைத் தொடர்ந்து சுமுக உடன்பாடு ஏற்பட்டது. மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக பாஜக மாநிலப் பொருளாளர் செல்வகணபதியை அதிகாரபூர்வமாகக் கட்சி மேலிடம் அறிவித்தது. வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாளான கடந்த 22-ம் தேதி செல்வகணபதி மனுத்தாக்கல் செய்தார்.
வேட்பு மனுக்கள் கடந்த 23-ம் தேதி அன்று பரிசீலனை செய்யப்பட்டன. இதில் சுயேச்சையாகத் தாக்கல் செய்தவர்களின் மனுக்களுக்கு எம்எல்ஏக்களின் பரிந்துரை இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று இறுதி நாளாகும். அரசியல் கட்சியினர் யாரும் மனுத் தாக்கல் செய்யாததால் புதுவை மாநிலங்களவை எம்.பி.யாகப் போட்டியின்றி பாஜக செல்வகணபதி தேர்வானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை செல்வகணபதி, தேர்தல் நடத்தும் அதிகாரி முனிசாமியிடம் பெற்றார். அவருக்கு முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.