Published : 27 Sep 2021 03:20 AM
Last Updated : 27 Sep 2021 03:20 AM
தேவூர் தேவபுரீஸ்வரர் கோயிலில் நேற்று திருப்பணிக்காக நிலத்தை தோண்டியபோது, ஐம்பொன்னால் ஆன 14 சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் அமைந்துள்ளது தேவபுரீஸ்வரர் கோயில். குலோத்துங்க சோழர் கால கோயிலான இங்கு திருப்பணிக்காக புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கோயிலில் உள்ள நவக்கிரக பீடத்தின் அருகே கான்கிரீட் அமைக்கும் பணிக்காக நேற்று நிலத்தை தோண்டியபோது, அங்கு ஐம்பொன்னாலான சில சுவாமி சிலைகள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், கீழ்வேளூர் வட்டாட்சியர் மாரிமுத்து, காவல் உதவி ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் அங்கு சென்று, சிலைகளை பார்வையிட்டனர்.
பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் அந்த இடத்தில் தொடர்ந்து தோண்டியபோது, அங்கு மேலும் சில ஐம்பொன் சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் கிடைத்தன.
இதில், 2 அடியில் இருந்து 4 அடி வரை உள்ள ஐம்பொன்னால் ஆன 13 அம்மன் சிலைகள், திருவாச்சியுடன் அமைந்துள்ள பிரதோஷ நாயனார் சிலை மற்றும் சங்கு, சூலம், மணி உள்ளிட்ட 19 பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
தோண்ட, தோண்ட சிலைகள்
தோண்ட, தோண்ட அந்த இடத்தில் சுவாமி சிலைகள், பூஜை பொருட்கள் கிடைத்ததால், அங்கு பொக்லைன் உதவியுடன் தொடர்ந்து தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகளவில் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறித்து தகவலறிந்த தேவூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சிலைகளைக் காண தேவபுரீஸ்வரர் கோயிலில் குவிந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT