

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.54 கோடி என்ன ஆனது என்பது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத் துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஜெயமணி மோகன்ராஜ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய் துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ. 54 கோடியே 17 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேர்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
ஆனால் அதன்பிறகு இந்தப் பணம் என்ன ஆனது, அதைக் கொண்டு வந்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்டும் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதுபோன்ற வழக்குகளில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்க முடியும்.
எனவே, கடந்த தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் என்ன ஆனது என்பது குறித்து விளக்கவும், அதுதொடர்பாக பதிவான வழக்குகளை விரைவாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வு, மனுதாரரின் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.