

புதுச்சேரியில் புதிதாக 117 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (செப். 22) வெளியிட்ட தகவல்:
''புதுச்சேரி மாநிலத்தில் 5,097 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 73, காரைக்கால்- 29, ஏனாம்-1, மாஹே- 14 பேர் என மொத்தம் 117 பேருக்கு (2.30 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 142 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 803 பேரும் என 945 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
காரைக்கால் திருநள்ளாறு, தேவமபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுப் பெண், காரைக்கால் காமராஜ் சாலையைச் சேர்ந்த 75 வயது முதியவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,834 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 92 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 956 (97.79 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரையில் 17 லட்சத்து 51 ஆயிரத்து 563 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 14 லட்சத்து 85 ஆயிரத்து 235 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.
மாநிலத்தில் இதுவரை 9 லட்சத்து 32 ஆயிரத்து 694 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.