Last Updated : 20 Sep, 2021 05:39 PM

 

Published : 20 Sep 2021 05:39 PM
Last Updated : 20 Sep 2021 05:39 PM

பண்ருட்டி அருகே முந்திரித் தொழிற்சாலையில் தொழிலாளி மர்ம சாவு: கடலூர் எம்.பி. மீது புகார்

விருத்தாச்சலம்

பண்ருட்டி அருகே பணிக்கன்குப்பத்தில் இயங்கிவரும் முந்திரித் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த கோவிந்தராஜூ (55) என்பவர் இன்று மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது இறப்புக்கு கடலூர் எம்.பி. டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்தான் காரணம் எனக் கூறி அவரது உறவினர்களும், பாமகவினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பணிக்கன்குப்பத்தில் கடலூர் மக்களவை உறுப்பினரான டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் பங்குதாரராக உள்ள முந்திரித் தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்தில் முந்திரி பதப்படுத்தப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் பணிக்கன்குப்பத்தைச் சேர்ந்த கோவிந்தராஜூ என்பவர் வேலை செய்துவந்த நிலையில், நேற்று அவர் நிறுவனத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்துத் தாக்கி, இரவு காடாம்புலியூர் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அவரது உடலில் காயத்தைக் கண்ட போலீஸார், தற்போது அவரைக் காவல் நிலையத்தில் வைத்திருக்க முடியாது. எனவே காலையில் அழைத்து வாருங்கள் எனக் கூறியதும், கோவிந்தசாமியை அழைத்துக் கொண்டு மீண்டும் நிறுவனத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்தனராம்.

காலை அவரைக் காவல் நிலையம் அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது உறவினர்கள், கோவிந்தராஜூவின் உடலில் காயம் இருப்பதை அறிந்து, அவரைக் கடலூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ் மற்றும் நிறுவனத்தில் உள்ள சிலர் தாக்கிக் கொலை செய்துவிட்டதாகவும், அவர்களை உடனடியாகக் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தியும் காடாம்புலியூர் காவல் நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதையடுத்து கடலூர் ஏடிஎஸ்பி அசோக்குமார் மற்றும் பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும், கோவிந்தராஜூவின் மகன் செந்தில்வேலன் அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஏடிஎஸ்பி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x