புதுச்சேரியில் 128 பேருக்கு கரோனா: ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரியில் 128 பேருக்கு கரோனா: ஒருவர் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுச்சேரியில் புதிதாக 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (செப்.18) வெளியிட்ட தகவலில், "புதுச்சேரி மாநிலத்தில் 5,004 பேருக்குப் பரிசோதனை செய்ததில் புதுச்சேரி-88, காரைக்கால்- 32, மாஹே- 8 பேர் என மொத்தம் 128 பேருக்கு (2.56 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 384 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 169 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 755 பேரும் என 924 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதுச்சேரி கொம்பாக்கத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,829 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

புதிதாக 122 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 631 (97.80 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 97 ஆயிரத்து 261 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in