

நாட்டில் இளைஞர்கள், வேலை வாய்ப்பு பெற உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ள “பிரதமரின் இலவச தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்’’ கீழ் ரயில்வேயில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று காணொலிமூலம் தொடங்கி வைத்தார். அதன்படி, நாடு முழுவதும் 75 ரயில்வே பயிற்சி கூடங்களில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
தெற்கு ரயில்வேயில் சென்னைபெரம்பூர் கேரேஜ் மற்றும் போத்தனூரில் உள்ள தொழிற்கூடங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடும் வகையில் இந்த திறன்மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை தொடங்கிவைக்கப்படுகிறது. பிரதமர் மோடிக்கு ரயில்வே சார்பில் பிறந்தநாள் பரிசாக அளக்கிறோம். இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும். தொடக்கத்தில் 1,000 பேருக்கு இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர் மற்றும் எலக்ட்ரிசியன் போன்ற துறைகளில் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், சொந்த தொழில் தொடங்க ஆலோசனை அளிக்கவும், இந்திய ரயில்வேயில் உள்ள அனைத்துத் தொழில் பயிற்சிப் பள்ளிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பயிற்சி சென்னை ஐசிஎப்-லும் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.