செப்.19-ல் 1600 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

செப்.19-ல் 1600 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் வரும் 19 ஆம் தேதி கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 1600 மையங்களில் தடுப்பூசி வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழக மக்கள் அனைவரையும் கோவிட் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் அனைவருக்கும் தடுப்பூசி விரைந்து செலுத்தப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள் பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வரின் உத்தரவின்படி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் தீவிர தடுப்பூசி இயக்கமாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாநகராட்சி பகுதிகளில் 26.08.2021 அன்று 200 வார்டுகளில் 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 12.09.2021 அன்று 1600 தீவிர தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு. 98,227 முதல் தவணை தடுப்பூசிகள், 93,123 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 1,91,350 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் பொழுது பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு அதிகளவில் பயனடைகின்றனர். எனவே, இதுபோன்ற தீவிர தடுப்பூசி முகாம்களை வாரந்தோறும் நடத்த தலைமைச் செயலாளர் அவர்கள் அறிவுறுத்தியதன் அடிப்படையில், வருகின்ற 19.09.2021 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் மொத்தம் 1600 தீவிர கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய நபர்களும், கோவாக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய நபர்களும் இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்தி பயனடையலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 19.09.2021 அன்று நடைபெறவுள்ள 1,600 கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைந்துள்ள இடங்களை பொதுமக்கள் https://chennaicorporation.gov.in/gcc/covid-details/mega_vac_det.jsp என்ற மாநகராட்சியின் இணையதள இணைப்பின் வாயிலாகவும், 044 - 2538 4520, 044 - 4612 2300 என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்.

பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் இந்தத் தடுப்பூசி முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in