தற்கொலை செய்து கொண்ட மாணவர் குடும்பத்துக்கு அதிமுக ரூ.10 லட்சம் நிதியுதவி

ஓபிஎஸ் - ஈபிஎஸ்: கோப்புப்படம்
ஓபிஎஸ் - ஈபிஎஸ்: கோப்புப்படம்
Updated on
2 min read

தற்கொலை செய்து கொண்ட மாணவர் தனுஷின் குடும்பத்துக்கு, அதிமுகவின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (செப். 13) வெளியிட்ட அறிக்கை:

"அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரும்; மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட ஜெயலலிதாவும், மாணவ, மாணவிகள் அனைவரும் சிறந்த கல்வி பயில்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தாயுள்ளத்தோடு செய்து கொடுத்து, இளைய தலைமுறையினர் அனைவரது உள்ளங்களிலும் நிலைத்து, நீடித்து வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், ஜெயலலிதாவின் நல்லாசியோடு செயல்பட்டு வரும் அதிமுக மாணவ, மாணவியரின் நலன்களைப் பாதுகாப்பதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டப்பேரவைத் தொகுதி, கூழையூரைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் என்பவரது இரண்டாவது மகன் தனுஷ் என்பவர், திமுகவின் பொய்யான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான, நீட் தேர்வுக்கு விலக்கு என்பதை நம்பி மேல்நிலைத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் இந்த அரசால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற இயலாத அரசாக உள்ளதை நாள்தோறும் எண்ணி, மனம் நொந்து வாழ்க்கையில் பல எல்லைகளைக் கடந்து சாதித்து, இந்த நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் மகத்தான மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்ந்த மாணவன் தனுஷ் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

அவரின் மரணத்துக்கு திமுகவும், அதன் அரசும் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். அவரின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியும், அவரது குடும்பத்துக்கு, அவர் இருந்து ஆற்ற வேண்டிய பணிக்கு ஒப்பாக தகுதியுடைய ஒருவருக்கு அரசு வேலை வழங்கியும், அவர்தம் குடும்பம் எந்தவித சிரமமும் இன்றி எதிர்காலத்தைக் கடக்க வழிவகை செய்ய வேண்டும்.

இந்தத் துயரமான சம்பவத்தைக் கருத்தில்கொண்டு அனைவரையும் தன் கண் எனக் காக்கும் அதிமுக மறைந்த தனுஷின் மரணத்துக்கு எதைக் கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது என்ற எண்ணம் எங்களுக்கு இருந்தபோதிலும், அவர்தம் குடும்பத் துயரத்தில் பங்குபெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு சிறிய உதவியாக, அதிமுகவின் சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எந்தத் துயரம் வந்தாலும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு போராடி, தடைகளைத் தாண்டி ஜெயலலிதாவின் வழியிலே பீடுநடைபோட்டு வெற்றிபெற வேண்டும் என்கின்ற போராட்ட குணத்தை மாணவச் செல்வங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மாறாக, பெற்றோர்களுக்கு காலமெல்லாம் மறக்கவே முடியாத துயரத்தை மாணவச் செல்வங்கள் வழங்கிவிடக் கூடாது என்பதை அறிவுரையாகக் கூறி, தன் இன்னுயிரை நீத்த தனுஷின் மறைவுக்கு அதிமுகவின் சார்பில் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, எல்லாம் வல்ல இறைவன் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கு மன உறுதியையும், வலிமையையும் தரவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறோம்".

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in