Published : 12 Sep 2021 03:19 AM
Last Updated : 12 Sep 2021 03:19 AM

பிரியாணி கடையில் உணவருந்திய சிறுமி உயிரிழப்பு : மருத்துவமனையில் 40 பேர் அனுமதி; உரிமையாளர், சமையலர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் காந்தி சாலையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில், கடந்த 8-ம் தேதி நூற்றுக்கணக்கானோர் அசைவ உணவு உட்கொண்டுள்ளனர். அவர்களில் பலருக்கு வாந்தி, தலைவலி, மயக்கம், காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டுள்ளது. இவர்களில், ஆரணி நகரம் லட்சுமி நகரில் வசித்த ஆனந்தன் மகள் லோஷினி(10) என்பவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஆனந்தன்(40), அவரது மனைவி பிரியதர்ஷிணி(32), மகன் சரண்(12) ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 40 பேர் பாதிக்கப்பட்டு ஆரணி, போளூர் மற்றும் வேலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீஸ் விசாரணையில், இறந்த சிறுமி மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் ‘தந்தூரி சிக்கன்’ உள்ளிட்ட அசைவ உணவு வகைகளை உட்கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆரணி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த பிரியாணி கடையின் உரிமையாளரான ஷரப் பஜாரில் வசிக்கும் காதர் பாஷா மகன் அம்ஜத் பாஷா(32), புலவன்பாடி கிராமத்தில் வசிக்கும் சமையலர் முனியாண்டி(35) ஆகியோரை கைது செய்தனர். அம்ஜத் பாஷாவுக்கு சொந்தமான 2 பிரியாணி கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையினர் ஆரணியில் உள்ள உணவகங்களில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, சம்பந்தப்பட்ட பிரியாணிக் கடையின் குளிர் சாதனப் பெட்டியில் பதப்படுத்தி வைத்திருந்த 15 கி கோழி, ஆட்டு இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர். இதேபோல், பல கடைகளில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இறைச்சி,கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. இதுகுறித்து மக்கள் தங்களது புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்-அப் எண்ணுக்கு தெரிவிக்கலாம் என மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.

ஆட்சியர் பா.முருகேஷ் கூறும்போது, “சம்பந்தப்பட்ட கடையில் பிரியாணி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு சேலத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தரமற்ற உணவு மற்றும் கலப்பட உணவு விற்பனை செய்தது நிரூபிக்கப்பட்டால் தவறு செய்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x