

புதுச்சேரியில் புதிதாக 82 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (செப். 9) வெளியிட்டுள்ள தகவல்:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,348 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரியில் 46, காரைக்காலில் 19, ஏனாமில் 9, மாஹேவில் 8 பேர் என மொத்தம் 82 பேருக்கு (1.53 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 175 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 818 பேரும் என 993 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட காரைக்கால் தாமஸ் அருள் தெருவைச் சேர்ந்த 77 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,820 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. புதிதாக 74 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 705 (97.74 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 16 லட்சத்து 87 ஆயிரத்து 835 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 14 லட்சத்து 32 ஆயிரத்து 215 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 8 லட்சத்து 49 ஆயிரத்து 360 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’.
இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.