

புதுச்சேரியில் 125 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (செப்.8) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,156 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-80, காரைக்கால்-23, ஏனாம்-7, மாஹே-15 பேர் என மொத்தம் 125 பேருக்கு (2.42 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 188 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 798 பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 986 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் உயிரிழப்பு இல்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,819 ஆகவும், இறப்பு விகிதம் 1.46 சதவீதமாகவும் உள்ளது.
புதிதாக 113 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 631 (97.75 சதவீதம்) ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் இதுவரை 8 லட்சத்து 46 ஆயிரத்து 50 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.