60 ஆண்டுகளாக ஆசிரியர் தின வாழ்த்து பெறும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்: 100-வது பிறந்தநாளை கொண்டாடினார்

60 ஆண்டுகளாக ஆசிரியர் தின வாழ்த்து பெறும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்: 100-வது பிறந்தநாளை கொண்டாடினார்
Updated on
1 min read

நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நிலையில், 60 ஆண்டுகளாக ஆசிரியர் தின வாழ்த்து பெறும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் தனது 100-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த இறையானூரைச் சேர்ந்தவர் பங்காருசாமி (100). 1921-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறந்த இவர், கடந்த 1948 ஆம் ஆண்டு இறையானூர் அரசுப் பள்ளியில் தனது ஆசிரியர் பணியை தொடங்கியுள்ளார். பல்வேறு பள்ளிகளில் பணியாற்றிய இவர் தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று 1980-ல் ஓய்வு பெற்றார்.

இவருக்கு 2 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். தற்போது புதுச்சேரி தர்மாபுரி தனகோடி நகரில் உள்ள தனது மகன் வீட்டில் மகன்கள், மகள்கள் வழி பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவர், இப்போதும் விவசாய வேலைகளை செய்து வருகிறார். இவரிடம் பயின்ற பலர் ஆசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பங்காருசாமி தனது 100-வது பிறந்தநாளை இன்று(செப். 4) கொண்டாடினார். அவரது குடும்பத்தினர் இந்த ஏற்பாட்டினை செய்திருந்தனர். அவரிடம் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர் சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததோடு, ஆசிரியர் தின வாழ்த்தையும் தெரிவித்து வாழ்த்துபெற்றனர்.

நாளை ஆசிரியர் தினம் கொண்டாடப்படும், நிலையில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பங்காருசாமி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்துக்கு முந்தைய நாள் பங்காருசாமி தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில், தனது பிறந்த நாள் வாழ்த்துடன், ஆசிரியர் தின வாழ்த்தையும் பெறுவதுண்டு. இதுபோல் கடந்த 60 ஆண்டுகளாக ஆசிரியர் தின வாழ்த்து பெற்று வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in