

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் சிவசங்கர் பாபாவுக்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி, அவரது பக்தர்கள் முட்டிபோட்டு கோஷமிட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் இயங்கி வருகிறது சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளி. இந்தப் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் சிலர் போலீஸில் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், கடந்த ஜூன் 16-ம் தேதி புதுதில்லியில் இருந்த சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதுவரை இவர் மீது 3 போக்சோ வழக்குகள் போடப்பட்டுள்ளன.
சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவுக்கு 2 முறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது. ஆனாலும் அவரது ஜாமீன்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தச் சூழ்நிலையில் கடந்த14-ம் தேதி சிபிசிஐடி போலீாஸர் 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆசிரியர்கள் 3 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெங்களூருவைச் சேர்ந்த பள்ளி மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில் அவர் செங்கல்பட்டு மகிளாநீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிவசங்கர் பாபாவை வரும் 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பக்தர்கள் போராட்டம்
பின்னர், சிவசங்கர் பாபா நீதிமன்றத்துக்கு வெளியே அழைத்து வரப்பட்டார். அப்போது அவரை விடுதலை செய்யக் கோரி, அவரதுபக்தர்கள் முட்டிப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்களை விலக்கிவிட்டு போலீஸார் சிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்றனர்.