

அதிமுக, திமுகவால் மதுவிலக்கை கொண்டு வர முடியாது. மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என மதிமுக அரசியல் மைய ஆலோசனைக் குழு உறுப்பினர் செந்தில் அதிபன் பேசினார்.
சேலத்தில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் சட்டப்பேரவை தேர்தலுக்கான செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுக அரசியல் மைய ஆலோசனைக் குழு உறுப்பினர் செந்தில் அதிபன் பேசியதாவது:
அதிமுக, திமுகவால் மதுவிலக்கை கொண்டு வர முடியாது. மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்தும். கிராமங்களின் வளர்ச்சிக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்யும். விவசாய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறிவந்த அதிமுக தற்போது கூட்டணியைப் பற்றி பேசத் தொடங்கிவிட்டது. தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது என்ற நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டுவிட்டது. மக்கள் நலக்கூட்டணிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. மக்கள் நலக்கூட்டணி தமிழகத்தின் மாற்று அணியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சேலத்தில் பாதாள சாக்கடை, மின்சார கேபிள் பதிப்பு என பல்வேறு பணிகளை காரணம் காட்டி நகரில் உள்ள சாலைகள் வீதிகள் சேதம் அடைந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சேலத்தில் உள்ள சாலைகள் முழுமையாக சீரமைக்கப்படும்.
சேலத்தின் முக்கிய தொழில்களான வெள்ளிக்கொலுசு உற்பத்தி, கைத்தறி ஜவுளி உற்பத்தி ஆகியவை மேம்படும் வகையில் இப்பொருட்களுக்கான விற்பனை சந்தைகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். முன்னதாக பேரணி நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ தங்கவேலு, மாவட்ட செயலாளர் தங்கவேலு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன், சிடிஐ மாநில குழு உறுப்பினர் சந்தானம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சேலம் மண்டல செயலாளர் நாவரசு, மதிமுக மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.