வ.உ.சி பெயரில் விருது; கோவையில் முழு உருவச் சிலை: முதல்வர் ஸ்டாலினின் 14 அறிவிப்புகள்

சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்.
Updated on
2 min read

கோவையில் வ.உ.சி.க்கு முழு உருவச் சிலை அமைக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வ.உ.சிதம்பரனாருடைய 150ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப். 03) 14 அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசியதாவது:

"நான் முதல்வராகப் பொறுப்பேற்று, என்னுடைய முதல் சுதந்திர தின உரையிலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேன். வ.உ.சியின் 150ஆவது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று நான் அறிவித்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அவரது 150ஆவது ஆண்டாக வருகிற காரணத்தால், 14 அறிவிப்புகளை நான் இப்போது அறிவிக்க விரும்புகிறேன்.

* சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக் கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அவரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும்.

* தூத்துக்குடி மாநகரில், முதன்மைச் சாலையான மேலபெரிய காட்டன் சாலை, இனி 'வ.உ.சிதம்பரனார் சாலை' என அழைக்கப்படும்.

* தனது வாழ்நாளின் முக்கிய நாட்களைக் கோவைச் சிறையிலே கழித்த வ.உ.சிதம்பரனாருடைய முழு உருவச் சிலை, கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில் அமைக்கப்படும்.

* செய்தித்துறையின் பராமரிப்பிலுள்ள ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபமும் புனரமைக்கப்பட்டு, அவ்விடங்களில் அவரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து பயனடையும் வகையில், ஒலி-ஒளிக் காட்சி அமைக்கப்படும்.

* வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், நவீன டிஜிட்டல் முறையிலே அது வெளியிடப்படும்.

* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சிதம்பரனார் பெயரில் புதிய ஆய்விருக்கை ஒன்று அமைக்கப்படும்.

* வ.உ.சிதம்பரனார் எழுதியுள்ள அனைத்துப் புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்

* திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் மற்றும் பாரதியார் படித்த பள்ளிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலை அரங்கம் மற்றும் நினைவு நுழைவு வாயில் 1.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

* கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பான துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றிவரும் தமிழர் ஒருவருக்கு 'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது' ஆண்டுதோறும் வழங்கப்படும். விருதுத் தொகையாக 5 லட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

* வ.உ.சிதம்பரனார் மறைந்த நவம்பர் 18ஆம் தேதி, தியாகத் திருநாளாக அறிவித்துக் கொண்டாடப்படும்.

* இந்த ஆண்டு, செப்டம்பர் 5, 2021 முதல் செப்டம்பர் 5 2022 வரை, தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் உருவாகும் அரசுக் கட்டிடங்களுக்குக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும்.

* பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து பயனடையும் வகையில், போக்குவரத்துத் துறையின் சார்பில் பேருந்து ஒன்றில் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்துப் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும்.

* தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ.சிதம்பரனார் குறித்த இணையவழிக் கருத்தரங்கம் நடைபெறும்.

* தமிழ் நிகர்நிலைக் கல்விக் கழகத்தின் வாயிலாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை முழுவதும் இணையத்திலே மின்மயப்படுத்தி வெளியிடப்படும்".

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in