

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஜனசேனா தலைவரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் அந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், "அன்ப்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்பாடுகளால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள்,
உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது.
உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 100 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், திமுக ஆட்சிக்கு பரவலாக ஆட்சிக்கு ஆதரவும் பாராட்டும் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அண்டைமாநில அரசியல் மற்றும் சினிமா பிரமுகரான பவன் கல்யாணின் பாராட்டு முக்கியத்துவம் பெறுகிறது.