

கர்நாடக மாநிலம் மைசூரு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரை கர்நாடக மாநில போலீஸார் கைது செய்தனர்.
இது தொடர்பாக, காவல் துறை தரப்பில் தெரிவித்ததாவது:
மைசூரு சாமுண்டிகோயில் அருகே கடந்த 24-ம் தேதி இரவு எம்பிஏ மாணவி ஒருவர், தனது ஆண் நண்பர் ஒருவருடன் சாமுண்டி மலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களை வழிமறித்த சிலர், அந்த பெண்ணை அழைத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனர்.
பாலியல் பலாத்காரம் நடைபெற்ற இடத்தில் அலைபேசி டவர் மூலம் கர்நாடக போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், 5 பேர் கொண்ட கும்பல் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி சூசைபுரம் கிராமத்தில் வசிக்கும் பூபதி (28) என்பவரை மைசூர் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் எஞ்சிய 4 பேரை, திருப்பூர் மாவட்டம் சேவூரில் இன்று (ஆக. 28) கைது செய்தனர்.
சாமுண்டிமலை பகுதியில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்றிரவு வந்த மைசூரு தனிப்படை போலீஸார் சேவூர் பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். அவர்கள் ஓட்டுநர் மற்றும் சுமை தொழிலாளர் பணிக்கு மைசூருக்கு சென்றிருப்பது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்றொருவரை தேடி வருவதாக மாவட்ட போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.