

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 28) தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்துறை தொடர்பான வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட்கள், தனியார்களுக்குச் சாதகமானவை, விவசாயத்தை அழிப்பது, நாட்டின் உணவுப் பாதுகாப்பை அழிப்பது என்று கூறி, டெல்லியில் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களுக்கு ஆரம்பம் முதலே திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும், திமுக ஆட்சி அமைந்ததும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்தீர்மானம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ், "வேளாண் சட்டங்கள் குறித்து ஆலோசிக்க முதல்வர், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். அவசரக் கோலத்தில் எதிர்க்கக் கூடாது. மத்திய அரசின் பார்வைக்கு விவசாயிகளின் கோரிக்கைகளைக் கொண்டுசெல்ல வேண்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும்" என்றார்.
இதையடுத்து, இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.