

புதுச்சேரியில் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஆக. 27) வெளியிட்டுள்ள தகவல்:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,991 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இவற்றில் புதுச்சேரி-48, காரைக்கால்-14, ஏனாம்-3, மாஹே-15 பேர் என மொத்தம் 80 பேருக்கு (2.67 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 231 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 160 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 608 பேரும் என மொத்தமாக மாநிலம் முழுவதும் 768 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,809 ஆகவும், இறப்பு விகிதம் 1.47 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 79 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 654 (97.91 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 16 லட்சத்து 24 ஆயிரத்து 626 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 13 லட்சத்து 78 ஆயிரத்து 796 பேருக்குத் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் இதுவரை 7 லட்சத்து 95 ஆயிரத்து 826 பேருக்கு (2-வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’
இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.