

கருணாநிதிக்கு நினைவிடம் என்ற அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அவர் இதனை இன்று (ஆக. 24) அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் முதல் அறிவிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும்.
அண்ணா நினைவிட வளாகத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே நினைவிடம் அமைக்கப்படும். அந்த நினைவிடத்தில் கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும்" என்றார்.
இந்த அறிவிப்பை வரவேற்றுப் பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், "கருணாநிதிக்கு நினைவிடம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வரவேற்கிறேன். அவரைப் பற்றிய அனைத்துச் சிறப்பம்சங்களும் நினைவிடத்தில் இடம்பெறக் கோரிக்கை வைக்கிறேன்.
என் தந்தை தீவிர கருணாநிதி பக்தர். அவர் பெட்டியில் எப்போதும் கலைஞரின் 'பராசக்தி' பட வசனப் புத்தகம் இருக்கும்" என்று தெரிவித்தார்.