

திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் முடிசூட்டப்பட்டார். தமிழகத்தின் முக்கிய ஆதீனங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து ஆசி வழங்கினர்.
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாக மதுரை ஆதீனம் உள்ளது. மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் மீனாட்சியம்மன் கோயில் அருகே இந்த ஆதீனத்தை சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் தோற்றுவித்தார். இந்த மதுரை ஆதினத்தின் 292-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வந்தார். அவர், கடந்த 13ஆம் தேதி உடல்நலக் குறைவால் முக்தி அடைந்தார்.
அவரது உடல் ஆதீனத்திற்குச் சொந்தமான முனிச்சாலை பகுதியில் உள்ள இடத்தில் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. அன்றே புதிய ஆதீனம் குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தருமையாதீனம் தருமைபுர ஆதீனத்தின் 27-வது குரு மகாசன்னிதானம் கைலை மாசிலாமணி தேசிக ஞானதேசிக பராமாச்சாரிய சுவாமிகள், முக்தியடைந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதரால் நியமிக்கப்பட்ட இளைய சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் புதிய ஆதீனமாகத் தேர்வு செய்யப்படுவார் என்று அறிவித்து, அவருக்கு ஞானாசிரிய அபிஷேகம், கிரியாவிதிகள் ஹோமங்கள் செய்து 293-ஆவது மதுரை ஆதீனமாக நியமனம் செய்தார்.
ஆனால், முக்தியடைந்த அருணகிரிநாதரின் 10 நாள் குருபூஜைக்குப் பிறகே மதுரை ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், மதுரை ஆதீனமாக முறைப்படி ஆதீனம் பீடத்தில் அமர்ந்து பொறுப்பேற்க முடியும் என்பதால் முக்தியடைந்த அருணகிரிநாதரின் குருபூஜைக்குப் பிறகு மதுரை ஆதீனம் மடத்தில் 293-வது ஆதீனம் பட்டாபிஷேகம் விழா இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று (திங்கட்கிழமை) மதுரை ஆதினத்தின் 293-வது ஆதீனமாக மதுரை ஆதீன மடத்தில் உள்ள பீடத்தில் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அமரும் ஞான பீடாரோகன நிகழ்வு தருமையாதீனத்தின் 27வது குரு மகா சன்னிதானம் கைலை மாசிலாமணி தேசிக ஞானதேசிக பராமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.
தருமைபுர ஆதீனம், அவருக்கு 293-வது ஆதீனமாக பட்டாபிஷேகம் சூட்டினார். அதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம், பேரூர் ஆதீனம், குன்றக்குடி, திருப்பனந்தாள், சிரவை ஆதீனம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய ஆதீனங்கள் கலந்துகொண்டு மதுரை புதிய ஆதீனத்திற்கு ஆசி வழங்கினர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சார்பிலும், அதன் செயல் அலுவலர் செல்லத்துரை, அதிகாரிகள் கலந்துகொண்டு புதிய ஆதீனத்திற்கு மரியாதை செலுத்தினர். இந்து அமைப்பு நிர்வாகிகள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று புதிய ஆதீனத்திடம் ஆசி பெற்றனர்.
பீடத்தில் அமர்ந்தபின் மதுரை ஆதீனம் மடத்தில் மதியம் 1.30 மணியளவில் மாகேஸ்வர பூஜையும், இன்று மாலை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வழிபாடும், அதனையடுத்து குருமூர்த்த சிறப்பு வழிபாடும், தொடர்ச்சியாக இரவு 8 மணிக்கு மேல் பட்டினப்பிரவேசமும், கொலுக்காட்சியும் நடத்தப்படும்.
யார் இந்த ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்?
மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமாகப் பொறுப்பேற்கும் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த காந்திமதிநாதன் பிள்ளை - ஜானகி அம்மை தம்பதியினருக்கு 25.03.1954-ல் மகனாகப் பிறந்தார்.
இவரது இயற்பெயர் பகவதி லட்சுமணன். தனது 21ஆவது வயதில் குன்றக்குடி ஆதீனத்தில் ஆறுமுகத் தம்பிரானாகவும், 1976-ஆம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை தருமையாதீனத்தில் நெல்லையப்பத் தம்பிரானாகவும், 1980 முதல் 2019ஆம் ஆண்டு வரை திருவாவடுதுறை ஆதீனத்தில் சுந்தரமூர்த்தி தம்பிரானாகவும் 39 ஆண்டுகள் பணியாற்றி வந்தார். மதுரை ஆதீனத்தில் 2019 ஜூன் 6ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதரால் சமய, விசேஷ நிர்வாண தீட்சை செய்து ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் எனப் பெயர் சூட்டப்பட்டு இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்டு தற்போது புதிய ஆதீனமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
புதிய ஆதீனத்தின் 6 உத்தரவுகள்
புதிய மதுரை ஆதினமாக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாசாரிய சுவாமிகள், மதுரை ஆதீனம் சார்பில் விடுப்பட்டு போன மதுரை மீனாட்சியம்மன் கோவில் உஷாகால கட்டளைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் என்றும், மதுரை ஆதின திருமடத்தில் நித்ய பூஜை, மாகேஸ்வர பூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்படும் என்றும், மதுரை ஆதினத்திற்கு சொந்தமான 4 கோவில்களிலும் தினசரி நித்யபடி பூஜைகள் நடத்தப்படவும் என்றும், குடமுழக்கு உள்ளிட்ட திருப்பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 6 உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.