

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கை வரும் செப்டம்பர் 2-ம் தேதிக்கு விழுப்புரம் நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்துள்ளார். அப்போது, அந்தப் பெண் எஸ்.பியை காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது சிபிசிஐடி போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 23-ம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றம் எண் 2-ல், நடுவர் முன்பு அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீஸார், கடந்த 29-ம் தேதி விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு கடந்த 9-ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி, எஸ்.பி. கண்ணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களுக்கு நடுவர் மன்றம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று (ஆக.23) விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே, சிறப்பு டிஜிபி ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு, அவரது வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார். எஸ்.பி. கண்ணன் நேரில் ஆஜரானார். இதையடுத்து. இவ்வழக்கை வருகின்ற செப்டம்பர் 2-ம் தேதிக்கு குற்றவியல் நடுவர் மன்ற நடுவர் கோபிநாதன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.