

நீர்வரத்து குறைந்துவிட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 6 அடி வரை குறைந்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு உரிய காலம் வரை நீர் திறப்பதற்கு கூடுதல் நீர் வரத்து தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும். தற்போது பருவமழைக் காலம் நீடிக்கும் நிலையிலும், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யாததால், கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக, மேட்டூர் அணைக்கு மிகக்குறைந்த அளவே நீர்வரத்து காணப்படுகிறது.
அணைக்கு நேற்று (ஆக. 17) விநாடிக்கு 4 ஆயிரத்து 379 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று (ஆக. 18) 4 ஆயிரத்து 23 கனஅடியாக குறைந்தது. இதனிடையே, காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக, மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதமும், மேட்டூர் கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கனஅடி வீதமும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
நீர்வரத்தை விட, நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளது . எனவே, அணையின் நீர் மட்டம் வேகமாக குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 11-ம் தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 73.97 அடியாக இருந்தது. ஒரு வார இடைவெளியில் தற்போதைய நீர் மட்டம் 68.09 அடியாவும், நீர் இருப்பு 31.08 டிஎம்சி-யாகவும் உள்ளது.
டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஜனவரி 28-ம் தேதி வரை நீர் திறப்பு நீடிக்க வேண்டும். அணையில் நீர் இருப்பு குறைந்து வரும் நிலையில், காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்து, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீர் திறக்கப்பட்டால் மட்டுமே, டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு உரிய காலம் வரை நீர் திறக்க முடியும் என்ற நிலை தற்போது நிலவுகிறது.