அகவிலைப்படி உயர்வை உடனே அமல்படுத்தக் கோரி ஆக.16-ல் அரசு ஊழியர்கள் 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம்

அகவிலைப்படி உயர்வை உடனே அமல்படுத்தக் கோரி ஆக.16-ல் அரசு ஊழியர்கள் 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

அகவிலைப்படி உயர்வை உடனேஅமல்படுத்தாதது உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகள் குறித்து தமிழக பட்ஜெட்டில் அறிவிப்புஏதும் வெளியாகாததைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்சார்பில் ஆக.16-ம் தேதி 1,000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரை மாவட்டஅரசு ஊழியர் சங்கத் தலைவர் ஜெ.மூர்த்தி, செயலாளர் நீதிராஜா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது பாராட்டுக்குரியது. அரசு ஊழியர்கள் குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது வரவேற்புக்குரியது.

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தி கடந்த ஜூலை மாதம் முதல் வழங்கியுள்ளது. இதே அகவிலைப்படி உயர்வை அதே தேதியில் இருந்து தமிழக அரசும் வழங்கும் என ஊழியர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல்தான் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவை காரணம் காட்டி ஏற்கெனவே 27 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டதால் அரசு ஊழியர்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.

அங்கன்வாடி, சத்துணவு, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் குறித்த அறிவிப்பும் இல்லை. சாலைப் பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்கக் காலத்தைப் பணிக்காலமாக கருதி வரன்முறைப்படுத்தும் அறிவிப்பும் இல்லை.

இக்கோரிக்கைகளை நடப்புசட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக முதல்வரின் கவனத்தை ஈர்க்கவும், வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆக.16-ம்தேதி தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றனர்.

இதே கோரிக்கையை அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு.அன்பரசு, பொதுச் செயலாளர் ஆ.செல்வம் ஆகியோரும் வலியுறுத்தி உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in