

பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற இருப்பதையொட்டி, ஓபிஎஸ்- ஈபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை இன்று நடைபெற்றது.
இதுகுறித்து அதிமுக இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
''தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2021-2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற இருப்பதையொட்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (13.08.2021) மாலை 4.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்,
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம்; அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தற்போது நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை எவ்வாறு அணுக வேண்டும் என்பது குறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்; இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினர்.
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.''
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.