ரிவால்டோ யானை வனப்பகுதியிலேயே இருக்கிறது: உயர் நீதிமன்றத்தில் வனத்துறை தகவல்

ரிவால்டோ யானை: கோப்புப்படம்
ரிவால்டோ யானை: கோப்புப்படம்
Updated on
1 min read

இரண்டாவது முயற்சியில் காட்டுக்குள் விடப்பட்ட ரிவால்டோ யானை வனப்பகுதியிலேயே இருப்பதாக, தமிழக வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானையை, வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து சிகிச்சை அளித்த வனத்துறையினர், அதனை சமீபத்தில் வனத்தில் விட்டனர். ஆனால், அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு திரும்பி வந்து விட்டது.

அந்த யானையை மீண்டும் வனத்தில் விட எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல உத்தரவிடக் கோரியும், இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (ஆக. 13) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ரிவால்டோ யானையை வனத்துக்கு அனுப்பும் முதல் முயற்சி தோல்வியடைந்த போதும், இரண்டாவது முயற்சியாக அதை காட்டுக்குள் விடப்பட்டுள்ளதாகவும், இதுவரை யானை வனத்திலேயே இருப்பதாகவும், ஆரோக்கியமாக இருப்பதாகவும், அதன் நடமாட்டத்தை 30 வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ரிவால்டோ யானையால் தொடர்ந்து வனப்பகுதியில் வசிக்க முடிகிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறி, வழக்கை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in