தொழில் வரி செலுத்த மார்ச் 31 கடைசி நாள்: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய, மாநில அரசு பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் 2015-16 நிதியாண்டின் 2-வது அரையாண்டு தொழில் வரியை மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மத்திய, மாநில மற்றும் பிற அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள், வணிகர்கள் ஆகியோரிடமிருந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை தொழில் வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரி வசூல், சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதி 1919, துணை விதி 138-ன் கீழ் வசூலிக்கப்படுகிறது. நிறுவனங்களின் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், நிறும வரி மூலதனத்தை பொறுத்து வரி செலுத்திட வேண்டும்.
அதன்படி, 2015-16 நிதியாண்டின் 2-வது அரையாண்டு தொழில் வரி மற்றும் நிறும வரியினை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், அபராதம் அல்லது வட்டி கணக்கீடு செய்து வசூலிக்கப்படும்.
சராசரி அரையாண்டு வருவாய் ரூ.21 ஆயிரம் வரை இருப்போர் தொழில் வரி செலுத்த தேவையில்லை. ரூ.30 ஆயிரம் வரை ரூ.100, ரூ.30 ஆயிரத்து 1 முதல் ரூ.45 ஆயிரம் வரை ரூ.235, ரூ.45 ஆயிரத்து 1 முதல் ரூ.60 ஆயிரம் வரை ரூ.510, ரூ.60 ஆயிரத்து 1 முதல் ரூ.75 ஆயிரம் வரை ரூ.760, ரூ.75 ஆயிரத்து 1-க்கு மேல் ரூ.1095 என வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
